விஷ்ணுபுரம் – வாசிப்பனுபவம்


விஷ்ணுபுரம்


என் சிறுவயதில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு பசு மாடுகள் எங்கள் வீட்டில் கன்று ஈனும். அப்பா அதற்கு பிரசவம் பார்க்கும் போது நானும் உதவுவேன். பிறகு நானே சில ஆடு மாடுகளுக்கும் பார்த்திருக்கிறேன். பனிக்குடம் உடைந்து கன்று வெளிவந்தவுடன் அதற்கு அருவாளால் குளம்பின் நுனியை சீவி விட்ட சிறிது நேரத்தில் கன்று எழுந்து பசுவின் வயிற்றில் பத்து மாதங்களாக ஓடாத ஓட்டத்தை எல்லாம் அன்றே ஓடிவிடும். நாய்கள் இரத்த மணத்திற்கு சுற்றி வரும். நஞ்சு கொடி விழுந்தவுடன் நாய்கள் தின்று விடாமல் இருப்பதற்காக அதை வைக்கோலில் சுற்றி மரத்தில் கட்டி தொங்க விடுவோம். பசு கன்று ஈனுவது குழந்தை பிறப்பு போல ஒரு மங்கள நிகழ்வு. ஆனால் ஒரு பசு இரண்டு தலை ஏழு கால்களுடன் கன்று ஈனும் நிகழ்வு மகா பிரளயத்திற்கு அறிகுறியாக இந்நாவலில் படித்ததும் அதிர்ந்தேன். 

 பிறப்பு, காதல், காமம், மகனின் இழப்பு மற்றும் பல மரணங்கள் என நாவல் முழுவதும் மனிதர்களின் உணர்வுகளை மிகத் தீவிரமாக சொல்லிச் செல்கிறது.

 பல்வேறு தருக்கங்கள் தத்துவங்கள் தரிசனங்கள் என்று இந்நாவலில் பல மறுவாசிப்புக்கு தேவையான பல பகுதிகள் உள்ளன.

 திருவடி, பிங்கலன், பத்மன், சங்கர்ஷணன், அஜிதன் என்று ஜெ யின்  பல பிம்பங்களை இந்நாவலில் கண்டேன்.

 காவிரி கரையில் உள்ள கடுவெளி சிவன் கோவிலும் தஞ்சை கல்லணை கால்வாய் கரையில் உள்ள பெரிய கோவிலும் எனது இளமை முழுவதும் 25 ஆண்டுகள் வாழ்ந்த நான் விஷ்ணுபுரம் கோவிலின் சிலைகளை பார்த்தும், தெருக்களிலும், பெருந்திருவிழா கூட்டத்திலும் இந்த ஒரு மாதமாக கனவில் வாழ்ந்தேன். இதனால் ஜெ இந்த நாவலை உருவாக்க செலவு செய்த 15 ஆண்டுகளின் உழைப்பை அறிகிறேன்.

 யானை டாக்டர் சிறுகதையில் வருவது போன்ற யானைக்கு மருத்துவம், வீரன் என்ற யானையின் மரணம் ஆகியவை யானையை மட்டுமல்ல என்னையும் புரட்டிப்போட்டது.

 பத்து நற்சுழியும் அமைந்த வைஜயந்தி குதிரையின் அறிமுகம் என் அப்பா வளர்த்த நெற்றியில் சங்கு சுழியும் உடலில் இலட்சுமி சுழியும் கொண்ட பழுப்பு நிற பசுங்கன்று நினைவு வருகிறது. சிற்பம் உருவாக்குதல் அதன் இலக்கணங்கள் என நாவல் முழுவதும் வரும் சிலைகளின் கடலில் மூழ்கி மூர்ச்சையாகினேன். இந்நாவலின் முதல் வாசகியான அருண்மொழி நங்கை அக்காவின் உழைப்பையும் வணங்குகிறேன்.

 விஷ்ணுபுரம் நாவலில் உள்ள என்னை கவர்ந்த சில கருத்துக்களை, முறத்தை கொண்டு புடைத்த சில முத்துக்களை இங்கே புதுக்குறளாக தொகுத்துள்ளேன். 

 புதுக்குறள் – விஷ்ணுபுரம்

1,கனவுகள் நம்மை நமக்கு காட்டுபவை

நம்மை நிலைகுலையச் செய்பவை

 --விஷ்ணுபுரம்,Page#21

 

2,எங்குமுள்ளதோ எங்குமில்லாததோ எல்லாமானதோ எல்லாவற்றிற்கும் 

அப்பாற்பட்டதோ அது வணங்கப்படுவதாக

 --விஷ்ணுபுரம்,ஹேமந்தன்,வசந்தன்,Page#40

 

3,மனிதன் ஞானத்தை உருவாக்கி கூன்போல 

முதுகில் சுமந்து திரிகிறான்

 --விஷ்ணுபுரம்,பீதாம்பரர்,Page#72

 

4,சாமானிய மக்களுக்கு ஞானமெனபது அச்சம்

மன்னர்களுக்கு அது ஆயுதம்

 --விஷ்ணுபுரம்,பீதாம்பரர்,Page#72

 

5,கவிதை காமம் உறவுகள் தத்துவங்கள்

எல்லாமே தனிமைக்கு பரிகாரம்

 --விஷ்ணுபுரம்,பிங்கலன்,Page#242

 

6,ஐயப்படும் மனம் பிரியத்தை ஏற்காது

பிரியம் ஒருவகை அசட்டுத்தனம்தான்

 --விஷ்ணுபுரம்,பிங்கலன்,Page#251

 

7,பூமியில் ஒவ்வோர் உயிரும் உண்மையாக 

வாழ்வது மகத்தான கடமையாகும்

 --விஷ்ணுபுரம்,பிங்கலன்,Page#251

 

8,ஒரு மாபெரும் காவியத்தை எழுதியிருந்தாலும்

பொன்தகட்டில் பொறித்திருந்தால் மதிப்பார்கள்

 --விஷ்ணுபுரம்,திரிவிக்ரமர்,Page#280

 

9,நான் இன்னும் ஐம்பதுவருடம் வாழலாம்

ஆனால் நேற்றோடு செத்துவிட்டேன்

 --விஷ்ணுபுரம்,சங்கர்ஷணன்,Page#306

 

10,கவிதையும் கலையும் வெறும் மனமயக்கங்கள்

மிகையான கற்பனைகளை உருவாக்கிக்கொள்ளும்

 --விஷ்ணுபுரம்,சங்கர்ஷணன்,Page#309

 

11,உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தேவையான 

ஞானம் மட்டுமே உண்மை

 --விஷ்ணுபுரம்,சங்கர்ஷணன்,Page#309

 

12,பிரபஞ்சம் தற்செயல்களின் பிரவாகம் ஒரு 

செயலிலிருந்து நூறு செயல்களாகும்

 --விஷ்ணுபுரம்,பத்மாட்சி,சங்கர்ஷணன்,Page#309

 

13,மக்கள் சாதாரணமானவர்களைத்தான் தலைவர்களாக்குகிறார்கள் பிறகு 

அசாதாரணமானவர்களாக எண்ணி வணங்குவார்கள்

 --விஷ்ணுபுரம்,வீரவல்லாளன்,நரசிங்கர்,Page#309

 

14,அறியாமையிலிருந்துதான் ஆனந்தம் வரும் அது 

அறிவிலிருந்து வர முடியாது

 --விஷ்ணுபுரம்,பிங்கலன்,சாருகேசி,Page#431

 

15,உடல் விளக்கு உயிர் நெய்

ஞானம் சுடர் நெய் தீர்ந்து 

விளக்கு மண்ணாகி விடுகிறது

 --விஷ்ணுபுரம்,சிற்பி,Page#462

 

16,சிறு பலவீனத்தில் தந்தையாக ஆகிவிடுவேன்

அவருடைய காலியிடத்தை நிரப்பிவிடுவேன்

 --விஷ்ணுபுரம்,சிற்பி,Page#463

 

17,படிப்பினால் பெறுவது இன்னொருவனின் தருக்கம்

உங்கள் தருக்கம் நீங்கள் கொள்ளும் 

மனப்பயிற்சி மூலமே கிடைக்கும்

 --விஷ்ணுபுரம்,சிற்பி,Page#464

 

18,அதிகாரம் இருப்பதாக காட்டிக்கொள்ளுந்தோறும் மேலும் 

அதிகாரம் கையில் வருகிறது

 --விஷ்ணுபுரம்,வல்லாளன்,நரசிங்கர்,Page#507

 

19,கருணை உள்ளவர்கள் மோசமான ஆட்சியாளர்கள்

அவர்களின் ஆட்சி தோற்கடிக்கப்படுகிறது

 --விஷ்ணுபுரம்,ஸ்வேததத்தன்,சூரியதத்தர்,Page#549

 

20அகங்காரிகளே மிகச் சிறந்த ஆட்சியாளர்கள்

கருணையுள்ள அரசு ஒன்றுமில்லை

 --விஷ்ணுபுரம்,ஸ்வேததத்தன்,சூரியதத்தர்,Page#549

 

21,ஞானத்தை ஒவ்வொன்றாக உதிர்த்தும் பரிபூரணத்தையடையலாம்

ஞானத்தின் படியேறிச்சென்றும் பரிபூரணத்தையடையலாம்

 --விஷ்ணுபுரம்,Page#594,

 

22,அவளின் தொடாதே என்ற ஒற்றைச்சொல் 

கழுமரம் போல ஊடுருவுகிறது

 --விஷ்ணுபுரம்,சங்கர்ஷணன்,Page#600

 

23,அழுக்கு பசி  இச்சை வெறி

உழைப்பு இதெல்லாம்தான் மனிதர்கள்

 --விஷ்ணுபுரம்,Page#608

 

24,இலட்சியக் கனவுகளை உண்டுபண்ணி மனிதன் 

வாழ்வின் அவலங்களுக்கு திரைபோடுகிறான்

 --விஷ்ணுபுரம்,Page#608

 

25,தொடாதே என்ற ஒற்றைச்சொல் கத்திமுனை 

போல உள்ளே புகுந்தது

 --விஷ்ணுபுரம்,Page#628

 

26,எந்த மனிதப்பிறவியும் என்னைவிட அதிக 

அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவில்லை

 --விஷ்ணுபுரம்,பிட்சு,பிங்கலன்,Page#639

 

27,கல்லையும் மண்ணையும் கூட விற்கலாம்

காவியத்தை விற்க முடியாது

 --விஷ்ணுபுரம்,பண்டாரம்,Page#689

 

28,குளிர்ந்த நீரில் குதிக்கும்முன் வரும் 

கணநேர அச்சமே அறிதல்

 --விஷ்ணுபுரம்,பிட்சு,Page#707

 

29.பரதேசத்து நாய்தான் கல்லை கண்டால் 

அடையாளம் வைத்து போகும்

 --விஷ்ணுபுரம்,வித்யார்த்தி,Page#715

 

30.ஓம் உண்மை வகுபடுவதில்லை ஓம்

இதுவல்ல அதுவல்ல  எதுவுமல்ல ஓம்

உண்மை இன்மை எதுவுமின்மை

 --விஷ்ணுபுரம்,காசியபன்,Page#733

 

31,நமது எண்ணங்கள் நதிப்பிரவாகம் என 

சென்றபடி திருஷ்ணை உள்ளன

 --விஷ்ணுபுரம்,பவதத்தர்,Page#761

 

32.இந்த பிரபஞ்சம் திரவியம் குணம் 

கருமம் சாமானியம் விசேஷம் சமவாயம்

எனப்படும் பதார்த்தங்களால் ஆனது

 --விஷ்ணுபுரம்,பிரசஸ்தபாதர்,Page#769

 

33.நிலம் நீர் வானம் காற்று,

நெருப்புகாலம் திசை ஆத்மா 

மனம் என்பவைகள் திரவியம்

 --விஷ்ணுபுரம்,பிரசஸ்தபாதர்,Page#769

 

34.உருவம் சுவை மணம் தொடுகை

பரிமாணம் பருண்மை சுகம் துக்கம் 

ஆசை வெறுப்பு முயற்சி எதிர்மை

முதலிய குணங்களையே அனுபவித்தறிகிறோம்

 --விஷ்ணுபுரம்,பிரசஸ்தபாதர்,Page#769

 

35.எழுதல் விழுதல் சுருங்குதல் விரிதல் 

நகர்தலென ஐவகை கருமங்கள்

 --விஷ்ணுபுரம்,பிரசஸ்தபாதர்,Page#769

 

36.தானம் சீலம் ஆசையின்மை ஞானம்

வீரியம் பொறுமை வாய்மை கட்டுப்பாடு 

அன்பு துறவு என்பவற்றில் நெறிப்படுத்தப்பட்ட 

மனம் வீடுபேறடையும் என்பார்

 --விஷ்ணுபுரம்,லாமா,Page#795

 

37.நற்காட்சி நல்லெண்ணம் நல்வாய்மை நற்செய்கை 

நல்வாழ்க்கை நல்முயற்சி நற்பழக்கங்கள் நற்தியானம்

எனபவைகள் அஷ்டாங்க மார்க்கம்

 --விஷ்ணுபுரம்,லாமா,Page#796

 

38.தூய உடலே அனைத்திற்கும் தொடக்கம்

உள்ளுறுப்புகளுக்கும் மூச்சுப்பயிற்சியும் அவசியம்

 --விஷ்ணுபுரம்,லாமா,Page#796

 

39.நாம் ஐம்புலன்களை அடக்க முடியாது 

அவற்றை வெல்ல வேண்டும்

 --விஷ்ணுபுரம்,லாமா,Page#799

 

40.அடக்குதல் என்பது ஒத்திப்போடுதலேயாகும் நிரந்தர 

வெற்றியென்பது கடந்து செல்லல்

 --விஷ்ணுபுரம்,லாமா,Page#799

 

41,புலி பற்றிய ஞானமே புலியைப்பற்றிய 

அச்சத்தை போக்கும் வழி

 --விஷ்ணுபுரம்,லாமா,Page#799

 

42.அகிம்சை சத்தியம் அஸ்தேயம் அபரிகிரகம் 

பிரம்மசரியம் என்பவை மகாவிரதங்கள்

 --விஷ்ணுபுரம்,தீர்த்தங்காரர்,Page#808

 

43.பசுக்களுக்கு மரணமில்லை குட்டிகளை அவை 

தங்களிடத்தில் தலைமுறைகள்தோறும் நிறுத்திவிடுகின்றன

 --விஷ்ணுபுரம்,தீர்த்தங்காரர்,Page#808

 

44.படிகளில் ஏறுவது படிகளை தாண்டத்தான்

ஞானத்தைக்கடக்க ஞானம் தேவை

 --விஷ்ணுபுரம்,Page#845

 

45.சுபக்கம் பரபக்கம் என்ற இருநிலைகளில் 

ஒன்றுடன் உங்களை பிணைத்துக்கட்டவேண்டும்

 --விஷ்ணுபுரம்,Page#845

 

46.ஞானத்தில் திளைத்தபடி ஞானமில்லையென்பது குதர்க்கம்

ஞானமும் தருக்கமும்  வேறுவேறல்ல

 --விஷ்ணுபுரம்,Page#845

 

47.பித்தநாடி உள்ளடங்கி வாதநாடி மேலெழுந்து

சீரான குளம்படியோசையுடன் மரணம்

 --விஷ்ணுபுரம்,Page#871

 

48.புயலடிக்கும் நள்ளிரவில் மின்னல் காட்டிய 

காடு போன்றது பிரபஞ்சக்காட்சி

 --விஷ்ணுபுரம்,அஜிதன்,Page#875

 

49.ஒன்றாக விவாதியுங்கள் ஒற்றுமையாக முன்னேறுங்கள் 

உங்கள் மனங்கள் ஒன்றாவதாக

 --விஷ்ணுபுரம்,ரிக்வேதம்,Page#885

 

50.எந்த ஞானத்தையாவது வெறுத்து இழித்துரைத்தானென்றால்

அவனுடைய அகத்தில் ஒளியேறாது

 --விஷ்ணுபுரம்,Page#885

 

51,எந்த ஞான தரிசனமும் ஒரு 

வகையில் பிறவற்றின் மறுதலிப்பேயாகும்

 --விஷ்ணுபுரம்,Page#889

 

52.புலன் மனோ தன்னுணர்வு யோகம் 

என ஞானம் நான்குவகை

 --விஷ்ணுபுரம்,Page#889

 

53.அறிதலே ஆக்கம் அறிதலின்மையே சூனியம்

அறிதல் இன்றி ஏதுமில்லை

 --விஷ்ணுபுரம்,Page#926

 

54.அறிய முடியாது என்பதை அறிவதே 

ஆகப்பெரிய மானுட ஞானம்

 --விஷ்ணுபுரம்,Page#929

 

55.மழைத்துளிதான் ஆத்மா கடல்தான் பிரம்மம் 

மழைத்துளி கடலை அறியுமா

 --விஷ்ணுபுரம்,Page#931

 

56.மூதாதையரும் மரணமும் காலமும் ஒன்றேயான 

பெருந்தோற்றமே முதல் கடவுள்

 --விஷ்ணுபுரம்,Page#948

 

57.பாத்திர விளிம்பில் ஓடும் வண்டு 

போல காலமும் முடிவற்றது

 --விஷ்ணுபுரம்,Page#949

 

58.காலமே மகா தர்மத்தின் ஆடிப்பிம்பம்

கால தரிசனமே மெய்ஞானம்

 --விஷ்ணுபுரம்,Page#953

 

59.ஏட்டில் படித்த அறிவென்ன அறிவடா?  

பூட்டி வைப்பது பொருளடா?

 --விஷ்ணுபுரம்,Page#956

 

60.பூண்ட அணியெலாம் சிதையிலே நீறடா?

நாலுதினத்தில் துருவேறும் சதையடா?

 --விஷ்ணுபுரம்,Page#956

 

61,ஈட்டி வாள்முனை வேலியும் எதுக்கடா

எமன்வரும் வாசலில் ஏதுக்கதவடா?

 --விஷ்ணுபுரம்,Page#956

 

62.பிரமித்து மனம்உறைகிறான் நேர்ந்தமைக்காக வெட்குவான்

உளம்சுருங்கி கண்ணீர் விடுவான்

 --விஷ்ணுபுரம்,Page#958

 

63.அரசன் போல ஆண்ட ஆசையுள்ள 

கோழைகள் சதி செய்வார்கள்

 --விஷ்ணுபுரம்,Page#975

 

64.தாயை பிள்ளைக்கும் மனைவியை கணவனுக்கும் 

எதிரியாக்கும் வயிற்று நெருப்பு(பசி)

 --விஷ்ணுபுரம்,Page#980

 

65.மனித சஞ்சாரம் இல்லாதிருப்பதன் சுதந்திரத்தை 

காட்டு தாவரங்கள் கொண்டாடுகின்றன

 --விஷ்ணுபுரம்,Page#985

 

66.நாளையும் நேற்றும் வெறும் உருவகங்கள்

இக்கணம் மட்டும்தான் வாழ்க்கை

 --விஷ்ணுபுரம்,Page#1027

 

67.முதுமை இருட்டில் கடைசி விளக்கும் 

அணையப்போகும்போது மானுடன் அஞ்சுகிறான்

 --விஷ்ணுபுரம்,Page#1028

 

68.மலைகளையெல்லாம் வெட்டி கட்டடங்களாக அடுக்கினார்கள்

வெறும் கர்வத்தை திருப்திசெய்வதற்காக

 --விஷ்ணுபுரம்,Page#1033

 

69.அமித அகால அற்ப போசனம்

பிழையான யோகம் நோயாகும்

 --விஷ்ணுபுரம்,Page#1033

 

70.வாதத்திற்கு விரோதி துக்கமும் துயில்நீக்கமும்

வாதம் சக்தி மூலம்

 --விஷ்ணுபுரம்,Page#1033

 

71,கல்லுக்கு மரணம் உண்டு ஆனால்

சொல்லுக்கு மரணம் இல்லை

 --விஷ்ணுபுரம்,Page#1101

 

72.இளம்பருவத்திலும் நடுவயதிலும் முதுமையிலும் எழுதி 

முடிப்பதே பெரும் காவியமாகும்

 --விஷ்ணுபுரம்,Page#11006

 

73.பெரும் காவியத்தை ஒருவன் வாழ்நாள் 

முழுக்க எழுதி முடிக்கவேண்டும்

 --விஷ்ணுபுரம்,Page#11006

 

74.இளவயதில் தேடல் பிறகு சமாதானம்

முதியவயதில் சமாதானமே தரிசனமாகும்

 --விஷ்ணுபுரம்,பாவகன்,Page#1131

 

75.இளமையின் குதூகலங்களுக்குப்பிறகு வாழ்வின் அடிப்படைகளை 

தரிசித்தலே ஞானம் தேடுதல்

 --விஷ்ணுபுரம்,சுதபஸ்,Page#1144

 

76.நூலை வாசிக்கும்போது எழுத்துகளாக ஓசைகளாக 

காட்சிகளாக  எண்ணங்களாக மனதிலோடும்

 --விஷ்ணுபுரம்,Page#1155

 

77.பரா பஸ்யந்தி மத்யமம் வைகரியென

பேச்சு நான்கு வகை

 --விஷ்ணுபுரம்,Page#115

 

78.புழுதியே அனைத்தையும் உண்ணும் பெரும்பசி 

கொண்ட மகாபிருத்வியின் சிறகு

 --விஷ்ணுபுரம்,Page#1171

 

79.யவனமது போல வயது ஏறஏற 

குருக்களுக்கு மதிப்பு அதிகம்

 --விஷ்ணுபுரம்,பீதாம்பரன்,Page#1175

 

80.தன் மரணம் மட்டுமே ஒருவனுக்கு 

பயங்கரமானது அச்சம் தருவது

 --விஷ்ணுபுரம்,பத்மன்,Page#1205

 

81,நாற்பதுவயதில் எல்லா மனிதர்களும் தங்களுக்கென்று 

ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக்கொண்டுவிடுகிறார்கள்

 --விஷ்ணுபுரம்,பத்மன்,Page#1216

 

82.இதுவரை வாழ்வின் ஒவ்வொரு கணமும் 

வாழ்வை உணர்வுபூர்வமாகவே நடிக்கிறேன்

 --விஷ்ணுபுரம்,யோகவிரதர்,Page#1239

 

83.எந்த மனிதனும் எதையும் தேடவில்லை

பிரபஞ்சப்பெருவெள்ளத்தில் தனித்துத்தெரியவேண்டுன்ற ஆசை

 --விஷ்ணுபுரம்,யோகவிரதர்,Page#1246

 

84.வாழ்வை அறிய முயல்பவர்கள் வாழ்வதில்லை

வாழ்பவர்கள் வாழ்வை அறிவதில்லை

 --விஷ்ணுபுரம்,யோகவிரதர்,Page#1246

 

85.ஆறு மழைநீருடன் எண்ணற்ற கரைஉயிர்களையும் 

சேர்த்து உறிஞ்சுவதால் இறங்கக்கூடாது

 --விஷ்ணுபுரம்,யோகவிரதர்,Page#1260

 

அமலோற்பவநாதன்(அமல்) யாகுலசாமி